Friday, 15 March 2024

திருக்குறள் கதைகள் - 635 635. அந்தரங்க உதவியாளர்

 திருக்குறள் கதைகள் - 635


635. அந்தரங்க உதவியாளர்



"அண்ணன் மத்திய அமைச்சர் ஆயிட்டாரு. இது அவருக்குப் புதுப் பொறுப்பு. எப்படிச் சமாளிக்கப் போறாரோ தெரியல!"


"ஆமாம். மாநில அமைச்சரா இருக்கறது  அங்கே என்ன வேலை செய்யறதுன்னு புரிஞ்சுக்கறதே கஷ்டம். அங்கே உள்ள அதிகாரிகள் வேற மாதிரி இருப்பாங்க. அவங்களை சமாளிக்கணும். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியும்னாலும் டில்லியில அமைச்சரா இருக்கறது அவருக்குப் பெரிய சவாலா இருக்கும்." 


"அதனாலதான் ஒரு நல்ல உதவியாளரை வச்சுக்கப் போறாராம்?"


"'யாரை வச்சுக்கப் போறாரு?"


"தன் அந்தரங்க உதவியாளர் மூலமாதான் மத்திய அரசு அதிகாரிகள், மற்ற அமைச்சர்களோட  இணைந்து அவரால இணைஞ்சு பணியாற்ற முடியும்.  நம்ம கட்சியில இருக்கற ஒரு படிச்ச அறிவுள்ள ஆளை வச்சுப்பாருன்னு நினைக்கிறேன்!"


"அப்ப உனக்கோ, எனக்கோ வாய்ப்பில்லேன்னு சொல்லு!" 


கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.


"என்ன ஆறுமுகம், மத்திய அமைச்சரா ஆயிட்டீங்க. உங்களுக்கு உதவியாளரா வரதுக்குக் கட்சிக்குள்ள நிறையப் போட்டி இருக்கு போலருக்கே!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.


"ஆமாங்க. அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன். நான் ஒத்தரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். அதுக்கு நீங்க ஒப்ப்தல்  கொடுக்கணும்!" என்றார் ஆறுமுகம்.


"சொல்லுங்க!" என்றார் சபாபதி.


ஆறுமுகம் சொன்ன பெயரைக் கேட்டதும் "குணசீலனா? சின்னப் பையனாச்சே அவன்! மேடையில நல்லா பேசறாங்கறதால அவனை செய்தித் தொடர்பாளராப் போட்டேன். அவனும் தொலைக்காட்சி விவாதங்கள்ள நல்லாவே பேசறான். ஆனா அந்தரங்கச் செயலர் பதவிக்கு அவன் சரியா இருப்பானா? மூத்த தலைவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காதான்னு காத்துக்கிட்டிருக்காங்க. எங்கிட்ட சில பேரு சிபாரிசுக்குக் கூட வந்தாங்க. ஆனா நான் ஆறுமுகம்தான் முடிவு செய்வாரு, நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா இப்படி அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பையனைப் போடறீங்கறீங்களே!"


"ஐயா! முதல் தடவையா நம்ம கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு. என் மேல நம்பிக்கை வச்சு அதை நீங்க எனக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பா செயல்பட்டு நம்ம கட்சிக்கு இந்திய அளவில ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.


"குணசீலன் படிச்சவர்.நேர்மையானவர். தொலைக்காட்சி விவாதங்கள்ள அவர் நியாமாப் பேசறதை எல்லாரும் பாராட்டறாங்க. நம் கட்சியை ஆதரிச்சுப் பேசறப்ப, அவர் உண்மைகளையும், நியாயங்களையும் மட்டும்தான் எடுத்து வைப்பாரு. மற்றவர்களை வசை பாட மாட்டாரு. சிந்திச்சு, அளவா, பொருத்தமாப் பேசுவாரு. 


"அதோட இல்லாம கட்சியில அவருக்கு அவ்வப்போது நீங்க கொடுத்த சின்னப் பொறுப்புகளை ரொம்பத் திறமையா நிறைவேற்றி இருக்காரு. அவரை உதவியாளரா வச்சுக்கிட்டா, அவர் ஒரு நல்ல ஆலோசகராவும் இருப்பாரு. அதனாலதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்."


ஆறுமுகம் சபாபதியைப் பார்த்தார்.


"கட்சியில இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தும். மூத்த தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தி அடைவாங்க. ஆனா நீங்க யோசிச்சு சரியான முடிவு எடுத்திருக்கும்போது, உங்க முடிவை ஆதரிக்க வேண்டியது என் கடமை. வாழ்த்துக்கள்!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 64

அமைச்சு


குறள் 635:


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.


பொருள்:


அறத்தை அறிந்து, கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைக

திருக்குறள் கதைகள் - 657 | கடன் வசூல் அதிகாரி

 திருக்குறள் கதைகள் - 657


657. கடன் வசூல் அதிகாரி



குமரனை யாராவது "எங்கே வேலை செய்யற?" என்று கேட்டால் அவன் சொல்லும் வெளிநாட்டு வங்கியின் பெயரைக் கேட்டுப் பலரும் அவனை மதிப்புடன் பார்ப்பார்கள்.


"என்ன வேலை?" என்று பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அப்படி.யாராவது கேட்டால் 'கடன் வசூல் அதிகாரி' என்று சொல்வான். அதற்கு மேல் யாரும் விரிவாக அவன் வேலை பற்றிக் கேட்க மாட்டார்கள்.


குமரனுக்குப் பெற்றோர்கள் இல்லாததால் அவன் சித்தப்பா அவனுக்குப் பெண் பார்த்தார்.


பெண் பார்க்கச் சென்றபோது, பெண்ணிடம் தனியாகப் பேச விரும்பினான் குமரன். பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்ததும் இருவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசினர்.


"நான் என்ன வேலை செய்யறேன்னு உனக்குத் தெரியுமா?" என்றான் குமரன்.


"கடன் வசூல் அதிகாரின்னு சொன்னாங்களே!" என்றாள் கிரிஜா என்ற அந்தப் பெண்.


"ஆமாம். ஆனால் கடன் வசூல் அதிகாரி இல்லை, கடன் வசூல் அடியாள்!"


"என்ன சொல்றீங்க?"


"எங்க வங்கில கடன் வாங்கிட்டுத் தவணை கட்டாதவங்க,, கிரடிட் கார்ட்ல பொருள் வாங்கிட்டுப் பணம் கொடுக்காதவங்க இவங்க வீட்டுக்கெல்லாம் போய் மிரட்டணும், அக்கம்பக்கத்தில இருக்கறவங்களுக்குக் கேட்கற மாதிரி அவமரியாதையாப் பேசணும், வீட்டுக்குள்ள போய் வெளியில இருக்கறவங்க , பாக்காம ரெண்டு அடி கொடுக்கணும், கொலை மிரட்டல் விடுக்கணும். கார், பைக், டிவி மாதிரி பொருட்களைத் தூக்கிக்கிட்டு வரணும். இந்த மாதிரி வேலைதான் நான் செய்யறது!" என்றான் குமரன் வெறுப்புடன்.


"எங்க பக்கத்து விட்டில கூட இந்த மாதிரி வந்து மிரட்டினாங்க. எங்களுக்கே பயமா இருந்தது!" என்றாள் கிரிஜா.


"ஆரம்பத்தில எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா இப்பல்லாம் மத்தவங்களை மிரட்டி, அவங்களுக்கு பயத்தை வரவழைச்சு எல்லாத்தையும் வித்தாவது பணத்தைக் கட்ட வைக்கறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நான் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னாலும், பழி, பாவம் எல்லாம் எனக்குத்தானே! அவங்க என்னை எப்படி வெறுப்பாங்க, எப்படியெல்லாம் சாபம் கொடுப்பாங்க! சில பேர் 'படுபாவி, நீ நல்லா இருப்பியா?'ன்'னு நேரடியாவே எனக்கு சாபம் விடுவாங்க. மனசுக்குள்ள என்னை சபிக்கிறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. என் மிரட்டலுக்கு பயந்து பணம் கட்டவும் வழியில்லாம ஒத்தர் தற்கொலையே பண்ணிக்கிட்டாரு!"


"இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"


"நான் இந்த வேலையில நான் தொடர விரும்பல. ஆனா நான் அதிகம் படிக்கல. அதனால எனக்கு வேற நல்ல வேலை கிடைக்காது. குறைஞ்ச சம்பளத்திலதான் வேலை கிடைக்கும். அந்த நிலையில நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பியா?" 


"நிச்சயமா. அதிக வருமானத்துக்காக என்ன பழி வந்தாலும் பரவாயில்லேன்னு  ஒரு தப்பான வேலையில இருக்கறதை விட, வறுமை வந்தாலும் பரவாயில்லைன்னு நியாயமான வேலை பாக்கறதே நல்லது" என்றாள் கிரிஜா.


"அப்படின்னா, நான் வேற வேலையில சேர்ந்துட்டு அப்புறம் உன் வீட்டில வந்து பெண் கேக்கறேன்!" என்றான் குமரன் மன நிறைவுடன்.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 66

வினைத்தூய்மை

குறள் 657:


பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை..


பொருள்:


பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.